பகுத்தறிவு பேசினால்

துணிக்கு ஏற்றபடி மனிதனை வெட்டாதே, மனிதனுக்கு ஏற்றபடி துணியை வெட்டு. நம்பிக்கைக்கு ஏற்றபடி உண்மையை மாற்றாதே, உண்மையை நோக்கி நம்பிக்கையை வை. ஒரு நம்பிக்கை மீது பற்று கொள்ளும் போது, அது நம் கண்களை உண்மையிலிருந்து மறைக்கின்றது. நம்பிக்கைக்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்பிக்கை நம் அறியாமையின், பேராசையின், பயத்தின் வெளிப்பாடு. நாம் நம் மீது முழு நம்பிக்கை வைக்காதவரை கண்டவற்றின் மீது நம்பிக்கை வரும். முதலில் தெரியாததை தெரியவில்லை என்று சொல்லும் தைரியம் வேண்டும்; அதுவே நம் பகுத்தறிவின் ஆரம்பம். அதுவே நம் கண்ணியத்தின் ஆதாரம்.

பகுத்தறிவு பேசினால்

நான் உனக்கு அறிவை தந்தேன்...

உலகை புரிந்து நடைபோட;

கருவிகள் செய்து உயிர்வாழ - மேலும்

காலநிலை கணித்து பயிர்செய்ய.

நான் உனக்கு அறிவை தந்தேன்...

தொற்று நோய்களை களைந்தெடுக்க;

கொடிய வியாதிகளுக்கு குணம்காண;

பெருங்கடலையும் ஆகாயத்தையும் தோற்கடிக்க;

அண்ட வெளியையும் வெற்றிகாண - மேலும்

உன் காலடியை நிலவிலும் பதிக்க!


நீ என்னை காண முடியும்...

உன் நீடித்த ஆவலில்;

உன் கேள்விகளில், சந்தேகங்களில்...

முக்கியமாக, உன் திறந்த மனதில்!

அறிவே ஆற்றல் - ஆனால்

நான் அகங்காரமும் அல்ல!

கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்

திறந்த மனது என் முன்நிபந்தனை!


பலநேரம், பலவற்றில்...

உன் மனதை மூடிக்கொண்டாய்;

குருட்டு நம்பிக்கைக்கு அடிமையானாய்!

அதன் ஆதாரமற்ற கொக்கரிப்புகளில்!

அதன் அகங்கார தீர்ப்புகளில்!

பாவங்கள் பற்றி பேசுகின்றாய் - கொடிய

நரகத்தின் தீயை பேசுகின்றாய் - உண்மையில்

மக்களை உயிருடன் எரிக்கின்றாய்;

அவர் ஆன்மாக்களை சபிக்கின்றாய்.


உன் மனக்கண்ணை திற;

நான் இந்த உலகை காட்டுகிறேன்...

குருட்டு அகங்கார கொக்கரிப்பை விட,

மிகச் சிறப்புடனும், மாட்சியுடனும்!

உன் மனக்கண்ணை திற;

நான் நிதர்சனத்தை காட்டுகிறேன்...

மாயஜால வித்தையை விட,

பெரு வியப்புடனும், மேன்மையுடனும்!

ஆனால் என் முதல் நிபந்தனை,

உனக்கு தெரியாத போது, சொல்:

எனக்கு தெரியாது என்று!


நீ என்னை காண முடியும்...

உன் நீடித்த ஆவலில்;

உன் கேள்விகளில், சந்தேகங்களில்;

நான் அகங்காரமும் அல்ல!

கடைசி தீர்ப்பும் அல்ல! - ஏனெனில்

திறந்த மனது என் முன்நிபந்தனை!

என் ஆரவாரமற்ற ஆரம்பம்,

நீ சொல்லும் துணிவான வார்த்தைகளில்:

எனக்கு தெரியாது என்று!

——

CK. காமராஜ்

03 ஆகஸ்ட் 2009 (தமிழ்)

30 ஜூலை 2009 (English)