பிரார்த்தனை

பக்தி மார்க்கம்

இரு முக்கிய ஆன்மீக பாதைகள்: ஞான மார்க்கம் மற்றும் பக்தி மார்க்கம். பக்தி மார்க்கம் (கடவுள் நம்பிக்கை) என்பது நம்முடைய இயல்பான அன்பு, பாசம், காதல் உணர்வை பயன்படுத்தும் ஆன்மிக மார்க்கம். அது சிறுபிள்ளைகளுக்கும் எளிதாக இருப்பதால், அது பரவலாக உலகில் பின்பற்றப் படுகின்றது. காதலுக்கு கண் இல்லை என்பது போல், பக்திக்கும் கண் இல்லை; அது பெரும்பாலும் குருட்டு நம்பிக்கையின் வெளிப்பாடாக உள்ளது. பக்தி வெகு எளிதாக பற்றாக, வெறியாக மாறிவிடுகின்றது. உண்மையான ஆன்மீக வளர்ச்சிக்கான விசயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்கள் மதச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் போன்ற மேலோட்டமான விசயங்களில் எளிதாக, முரட்டுத்தனமாக பற்றிக்கொள்கின்றார்கள்.

பக்தி மார்க்கத்தை பின்பற்றுபவர்கள், சிறுபிள்ளைத்தனமாக இல்லாமல், அதை சற்றே தெளிவுடன், மனமுதிர்ச்சியுடன் பின்பற்ற கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே உண்மையான ஆன்மிக வளர்ச்சிக்கும், உலக அமைதிக்கும் வழிவகுக்கும். மற்றவை எல்லாம், தற்காலிக போதை தரும் நீடித்த அவலம். நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது, அது மலைகளையும் நகர்த்தும். அதனுடன் தெளிந்தறிநிலையை கொண்டு வரும் போது, அந்த சக்தியை தெளிவுடன், தேர்ந்த அறிவுடன் கையாள வழிவகுக்கின்றது.

"நம்பிக்கை சக்தி வாய்ந்தது, ஆனால் அதற்கு பார்வை இல்லை. தெளிந்தறிநிலை அதற்கு கண்களைத் தருகிறது"

வாழ்க்கையின் நெருப்புகள்

நெருப்பின் மேல் கையை வைத்தால் சுடும். அதை நாம் ஒழுங்காக அறிந்து, கற்று கொள்ளாமல் திரும்ப, திரும்ப கையை வைத்தால், துன்பம் நமக்கு தான். இப்படிப்பட்ட பல “நெருப்புகள்”, நம் வாழ்க்கையில் பல விதங்களில், பல வடிவங்களில் வருகின்றன. அதன் விளைவுகள் நேரடியாக, உடனடியாக இல்லாமல், சற்றே நுட்பமாகவும், சிக்கலாகவும் உள்ளது. அதனால், அவை நமக்கு ஒழுங்காக புலப்படுவதில்லை. சிறுபிள்ளைத்தனமாக, நாம் திரும்பவும், திரும்பவும் நெருப்பின் மேல் கையை வைத்துக் கொண்டு துயரத்தில் அவதிப்படுகின்றோம்.

நெருப்பின் மேல் கையை வைத்து கொண்டு, சுடுதே என்று எத்தனை முறை வேண்டினாலும் சுடவே செய்யும். இயேசு நமக்காக கருணை படலாம், பசிக்கு உணவு தரலாம், நோய்க்கு மருந்து தரலாம், ஆனால் நமக்காக சாப்பிட முடியாது, நாம் தான் நமக்காக சாப்பிட்டாக வேண்டும். அவர் காட்டிய மருந்தை எடுத்துக்கொள்ளாமல், வழிமுறையை நடைமுறை படுத்தாமல், அவற்றை வெறுமே படித்துக்கொண்டும், கோஷம் போட்டுக்கொண்டும் இருந்தால் ஒரு பயனும் இல்லை. இயேசு வழியைத் தான் காட்ட முடியும், நாம் தான் நமக்காக நடந்தாக வேண்டும். வழியை தெளிவாக கவனிக்காமல், புரிந்துகொள்ளாமல், குருட்டுத்தனமாக சென்று சுவரில் முட்டிக்கொண்டால் வலிக்கவே செய்யும்.

எனவே பிரார்த்தனை என்பது வேண்டிக் கொள்வது என்பதை விட, நாம் முழுமையாக விழித்துக் கொள்வதாக... தெளிவையும், புரிதலையும் தருவதாக... இருக்க வேண்டும்.

தைரியமுடன் எதிர்கொள்ளுதல்

நம் வாழ்க்கையில் மூன்று தூதுவர்கள் வந்து வாழ்வின் அடிப்படை உண்மைகளை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் நாம் அவர்களை முழுமையாக மனதில் வாங்கிக் கொள்வதில்லை. அந்த மூன்று தூதுவர்கள்: பிணி (உடல்நிலை சரியில்லாமல் போதல்), மூப்பு (வயதடைதல்), சாக்காடு (மரணம்). இவை வாழ்வின் நிதர்சனம், இவற்றிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. இந்த உலகத்தில் மாற்றம் என்பதும், வாழ்க்கையில் வலிகள் என்பதும் அடிப்படை உண்மைகள். இவற்றை எதிர்த்து போராடும் போது, நாம் மேலும் அவதிப்படுகின்றோம். வாழ்க்கையை முழுமையாக, உள்ளது உள்ளபடியே நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது, நல்வாழ்க்கையும் நமக்கு மறுக்கப்படுகின்றது.

நம் வலிகளை, துன்பங்களை நேரடியாக எதிர்கொள்ள, ஏற்றுக்கொள்ள பயந்து, அவற்றிலிருந்து தப்பிக்க நாம் பல்வேறு வழிகளை நாடுகின்றோம்: மது போன்ற போதை பழக்கங்கள், சினிமா, டிவி போன்ற பொழுதுபோக்கு பழக்கங்கள், மேலும் பிரார்த்தனை, ஜெபத்தைக் கூட அப்படியே பயன்படுத்துகின்றோம். நாம் பயந்து ஓட, ஓட அவை மேலும், மேலும் பெருகி, நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றன. இயேசு வெறுமே போதிக்காமல், நம் சிலுவைகளை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை வாழ்ந்து காட்டுகின்றார்.

"வீரனுக்கு ஒரு நாள் சாவு, பயந்தவனுக்கு ஒவ்வொரு நாளும் சாவு."

துயரத்தில் வாடுவது, அவலத்தில் புலம்புவது, கோபத்தில் கத்துவது என்பது மிக எளிது; அதை எந்த கோழையாலும், மடையனாலும் செய்ய முடியும். அமைதி காக்க, மகிழ்ச்சியில் இருக்க, மனதார சிரிக்க நிறைய தைரியம் வேண்டும், ஞானம் வேண்டும்.

விதைப்பதையே அறுவடை செய்வோம்

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுவடை செய்கின்றோம். பயத்தை, கவலையை, சோகத்தை, புலம்பலை விதைத்தால், அதுவே மேலும் பெருகும். கோபத்தை, எரிச்சலை, வெறுப்பை விதைத்தால், அதுவே மேலும் பெருகும். தைரியத்தை, பொறுமையை, அன்பை, சந்தோசத்தை விதைத்தால், அது மேலும் பெருகி வளர்ச்சி அடையும்.

"உள்ளவன் எவனோ அவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்." — [மத்தேயு 13:12]

ஞானம் உன்னிடத்தில் இருந்தால், அது மேலும் வளரும்; இல்லையென்றால் இருப்பதும் போய்விடும். சந்தோசம் உன்னிடத்தில் இருந்தால், அது மேலும் வளரும்; இல்லையென்றால் இருப்பதும் போய்விடும். தைரியம் உன்னிடத்தில் இருந்தால், அது மேலும் கொடுக்கப்படும்; இல்லையென்றால் இருப்பதும் போய்விடும். கோபமும், புலம்பலும் இருந்தால் அதுவே மேலும் வளரும், இருக்கும் நிம்மதியும், சந்தோசமும் போய்விடும்.

"மகிழ்ச்சிக்கு வழி இல்லை; மகிழ்ச்சிதான் வழி"

கண் இல்லாமல், கால் இல்லாமல், அடுத்த வேலை உணவு இல்லாமல், எந்த சொந்த பந்தங்களும் இல்லாமல் இருப்பவர்கள் இந்த உலகத்தில் கோடான கோடி. நமக்கு கிடைத்த வரங்கள், செல்வங்கள் மிக அதிகம். அதற்கு நன்றி கூறுவதற்கு பதில், இல்லாததை பற்றி, இழந்ததை பற்றி புலம்பி குறைகூறி கொண்டிருந்தால், நமக்கு இருப்பதும் போய்விடும்.

வேண்டி கொள்ளும் விதம்

வேண்டி கொள்ளும் போது, தைரியம், பொறுமை, நிதானம், அமைதி, சந்தோசம், அன்பு, ஆரோக்கியம், சமாதானம், ஞானம் போன்றவற்றை வேண்டுங்கள்; மற்றவை எல்லாம் சுயநலமாகவே இருக்கும். சுய-அன்பாக இருத்தல் நன்று, சுயநலமாக அல்ல.

"எவற்றையெல்லாம் வேண்டுகின்றீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள், அவை உங்களது ஆகும்." — [மாற்கு 11:24]

தைரியம் வேண்டும் என்று வேண்டும் போது, அதை பெற்று விட்டீர்கள் என நம்புங்கள், அப்படியே நடந்து கொள்ளுங்கள், அது உங்களை அடையும். சந்தோசம் வேண்டும் என்று வேண்டும் போது, அதை பெற்று விட்டீர்கள் என நம்புங்கள், அப்படியே நடந்து கொள்ளுங்கள், அது உங்களை அடையும். உண்மையான முழு நம்பிக்கை இருந்தால், அது "நான்" என்ற ஈகோவை அழித்து "சரணடைய" வழிவகுக்கும்; அப்போது நாம் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே தைரியமாக ஏற்றுக்கொள்ள இயலும்.

"வாழ்க்கையின் முரண்பாடு: நீ சரணடையும் போது, விடுதலை அடைகின்றாய்"

பிரார்த்தனை என்பது நாம் பயந்து ஒளிந்து கொள்வதற்கான ஒன்றல்ல. மேலும் அது புலம்புவதோ, பைத்தியம் போல் பேசி கொள்வதோ, ராஜாவுக்கு கோசம் போடுவது போல் கத்துவதோ அல்ல.

"வேண்டிக்கொள்ளும் போது, மூடர்களைப் போல் வீண் வார்த்தைகளை அலப்பாதீர்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்." — [மத்தேயு 6:7]

நம் மனம் பயத்தில், ஆசையில், அறியாமையில் மூழ்கி அங்கும் இங்கும் அலைபாய்கின்றது. நாம் எவ்வித தெளிவும் இன்றி, மனம் போன போக்கில் அதன் அடிமையாக ஓடிக்கொண்டு உள்ளோம். நம் பிரார்த்தனையின் வெளிப்பாடும் அதன்படியே உள்ளது. எனவே முதலில் நம் மனதை இளைப்பாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நம் மனதை அமைதி நிலைப்படுத்த வேண்டும். அப்போது நம் மனம் தெளிவு, திடம் காணும். அந்த அமைதியில், நாம் செய்யும் பிரார்த்தனை தெளிவுடன், முழுமனதுடன் ஆழமாக, பயனுள்ளதாக இருக்கும்.

"கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை கூட்ட முடியுமா?" — [மத்தேயு 6:27]

மனதை அமைதி நிலைப்படுத்துதல்

மனதை எதிர்த்து போராடி, நிலைத்த வெற்றி காண முடியாது. அது அமைதியை மேலும் சீர்குலைக்கவே வழிவகுக்கும். மனதை அடக்கி வைத்தால், அது உள்ளே புற்றுநோயாக வளரும். ஒரு அம்மா தன் குழந்தையை பொறுமையாக கவனித்து, கேட்டு புரிந்து கொண்டு அமைதி படுத்துவது போல், நம் மனதை நாம் மெதுவாக, படிப்படியாக அமைதி நிலைப்படுத்த வேண்டும். அதற்கு அக்கறையுடன், பொறுமையுடன் கவனிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

சாராயம் குடிப்பவனிடம், அவன் உடல் கதறி, கதறி நிறுத்த சொல்லிக் கொண்டே இருக்கும்; ஆனால் அவன் அதை ஒழுங்காக கேட்பதில்லை. நம் உடல், மனம் பலவற்றை சொல்லிக்கொண்டே உள்ளது; நாம் தான் ஒழுங்காக கேட்பதில்லை. வானம், பூமி, காற்று, பூக்கள், பறவைகள் அனைத்தும் நம்மிடம் பலவற்றை சொல்லிக்கொண்டே உள்ளன; ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை. நம் ஆசையில், பயத்தில் வாழ்க்கையை போராட்டமாக்கி, காய்ந்து போன சருகாக பட்டுப்போய்கின்றோம்.

"நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு தேவை இன்னது என்று அவர் அறிந்திருக்கிறார்." — [மத்தேயு 6:8]

பிரச்சனை என்னவென்றால், நம் தேவை உண்மையில் என்னவென்று நமக்கு தெளிவாக தெரிவதில்லை, அதற்கான புரிதல் இல்லை, பொறுமையாக மனம் கொடுத்து கேட்பதுமில்லை. எனவே பிரார்த்தனை என்பது வேண்டிக் கொள்வது என்பதை விட, அமைதியாக முழுமனதுடன், அக்கறையுடன் கவனிப்பதாக இருக்க வேண்டும். அது நமக்கு தெளிவையும், புரிதலையும், ஞான ஒளியையும் தரும்.

"அமைதி அனுசரிப்பதை விட உயர்ந்த பிரார்த்தனை எதுவும் இல்லை"

பிரார்த்தனை: அமைதி நிலைப்படுத்துதல்

  • நேராக நிமிர்ந்து, அதே நேரம் உடலை இறுக்கி கொள்ளாமல், வசதியாக உட்கார்ந்து கொள்ளவும். முடியவில்லை என்றால் படுத்து கொள்ளலாம். கண்ணை மூடிக்கொள்வது ஏற்றது என்றால் மூடிக்கொள்ளவும்.

[உடலை அமைதி நிலைப்படுத்துதல்: 5 நிமிடம்]

  • கால் பாதத்தில் இருந்து உச்சந்தலை வரை, உடலை மெதுவாக, படிப்படியாக உள்ளுணர்வாக கவனிக்கவும். உடலில் எங்கேயும் இறுக்கத்துடன் இருந்தால், அதை சற்றே தளர்த்தி சாந்த படுத்தவும். தேவை பட்டால், அவ்விடத்தை கவனத்தில் நிறுத்தி, மெதுவாக, ஆழ்ந்த மூச்சு விட்டு இளைப்பாற செய்யவும்.

[மனதை அமைதி நிலைப்படுத்துதல்: 5-10 நிமிடம்]

  • தேவை பட்டால், மூன்று முறை மெதுவாக, ஆழ்ந்த மூச்சு விட்டு மனதை இளைப்பாற செய்யவும்.

  • இயேசுவை (அல்லது மாதாவை அல்லது உங்களுக்கு ஏற்றவரை) மனதில் நிறுத்தவும். அப்பொழுது ஏற்படும் ஆழ்ந்த அன்பை, அமைதியை மனதில் உணரவும். இந்த உணர்வை மட்டும் முழுகவனத்தில் வைக்கவும். எந்தவித சிந்தனையும் தேவையில்லை.

  • பல்வேறு விதமான எண்ணங்கள், கவலைகள், கற்பனைகள், உள்மன-கதைகள் நம் கவனத்தை சிதறடிக்கலாம். அப்படி ஏற்படும் போது, எந்தவிதமான விமர்சனமும், கண்டனமும் செய்யாமல், கவனத்தை அமைதியாக மீண்டும் இயேசுவை மனதில் நிறுத்திய ஆழ்ந்த அன்பான, அமைதியான மன-உணர்வின் மீது கொண்டு வரவும். மனம் அலைபாயும் தன்மை கொண்டது. எனவே இதை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் தொடர்ந்து பொறுமையாக செய்யவும்.

  • மனதில் ஏற்படும், எல்லாவித மனநிலையையும் எவ்வித போராட்டமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளவும். அழுகை வந்தால், எந்தவிதத்திலும் அதை கட்டுப்படுத்தாமல் முழுமையாக அழுகவும். கோபம் இருந்தால், அதை கட்டுப்படுத்தாமல் முழுமையாக உணரவும்.

பிரார்த்தனை: வேண்டுதல்

[அமைதி நிலைப்படுத்துதல்: 10 நிமிடம்]

  • மேல் கூறியபடி முதலில் உடலை, மனதை அமைதி நிலைப்படுத்த செய்யவும்.

[வேண்டுதல்: 10 நிமிடம்]

  • உங்களுக்காகவும், உங்களை சார்ந்தவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் வேண்டி கொள்ளவும். சூழ்நிலைக்கு ஏற்ப, அன்பு, அமைதி, பொறுமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி, தைரியம், ஞானம் பெற வேண்டி கொள்ளவும்.

  • யார் மீதும் கோபமோ, வெறுப்போ இருந்தால், அவருக்காக, அவரின் ஆரோக்கியம், சந்தோசத்திற்காக வேண்டி கொள்ளவும்.

  • வேண்டுதலை மனதில் கூறி, அந்த உணர்வை மனதில் வைக்கவும். அந்த உணர்வு குறையும் பொது, மீண்டும், மீண்டும் வேண்டுதலை மனதில் கூறவும்.

    • ஆரோக்கியத்தையும், சந்தோசத்தையும் எனக்கு தரவும். மன திடத்தையும், மன அமைதியையும் தரவும்.

    • இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், சந்தோசத்தையும் தரவும். மன திடத்தையும், மன அமைதியையும் தரவும்.

  • மனதில் ஏற்படும், எல்லாவித மனநிலையையும் எவ்வித போராட்டமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளவும்.

பிரார்த்தனை: நன்றி கூறுதல்

[அமைதி நிலைப்படுத்துதல்: 10 நிமிடம்]

  • மேல் கூறியபடி முதலில் உடலை, மனதை அமைதி நிலைப்படுத்த செய்யவும்.

[நன்றி கூறுதல்: 5 நிமிடம்]

  • வாழ்க்கையில் கிடைத்த வரங்களுக்கு, செல்வங்களுக்கு நன்றி கூறவும்.

  • இன்று நடந்த நல்-நிகழ்வுகளுக்கு, சந்தோசங்களுக்கு நன்றி கூறவும். ஒவ்வொரு நாளும், குறைந்த பட்சம் மூன்று சந்தோசங்களுக்காக நன்றி கூறவும்.

    • இன்று கிடைத்த உணவிற்கு நன்றி.

    • என்னை கவனிக்க கொடுத்த மகளுக்காக நன்றி.

    • எனக்கு அக்கறை செலுத்தும் பேரனுக்காக நன்றி.

    • வலி ஓரளவிற்கு குறைந்ததற்கு நன்றி.

குறிப்பு

  • இவற்றை தொடர்ந்து செய்வதில் தான் பலன் உண்டாகும்.

  • அமைதி நிலைப்படுத்துதலை முறையாக, திறம்பட செய்வதற்கு தொடர்ச்சியான பயிற்சி தேவை.

  • நன்றி கூறுதலை மாலை/ இரவு நேர பிரார்த்தனையில் செய்யலாம்.


——

CK. காமராஜ்

30 ஆகஸ்ட் 2019 (தமிழ்)

23 செப்டம்பர் 2019 (English)

பின் குறிப்பு

இது என் அம்மாவிற்காக, அவரின் நம்பிக்கையை சார்ந்து எழுதியது. இதை மற்ற நம்பிக்கைகளுக்கும் இதேபோல் பயன்படுத்தப்படலாம்.

பற்று என்பதும் அன்பு, அக்கறை என்பதும் வேறு வேறு. இனப்பற்று, மொழி பற்று, தேசிய பற்று, மதப்பற்று என அனைத்தும் நமக்கும், மற்றவருக்கும் அவலத்தையே தருகின்றது. மதவாதிகளும், அரசியல்வாதிகளும் நம் பற்றை பற்ற வைத்தே குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். நமக்கு பற்று இருக்கும் வரை, உலகில் உள்ள சண்டை, சச்சரவுகளுக்கு நாமும் ஒரு காரணம். பற்றை பிடித்துக் கொண்டு உலக சமாதானம் பேசுவது மடமை.